Thursday, August 20, 2020

51. அச்சோப் பதிகம்

 51. அச்சோப் பதிகம்

கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)

 அனுபவவழி அறியாமை; கலிவிருத்தம்.

திருச்சிற்றம்பலம்


முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.  1
நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு
அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.  2 
பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே
மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்
தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.  3 
மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்
சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூநெறியே சேரும்வண்ணம்
அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே.  4 
பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்
உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று
அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே.  5 
வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்
கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்
பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து
அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.  6 
தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி
உய்யும்நெறி காட்டுவித்திட் டோங்காரத் துட்பொருளை
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.  7 
சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்
காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை
மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.  8 
செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.  9 

திருச்சிற்றம்பலம்

50. ஆனந்தமாலை


50. ஆனந்தமாலை

கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)

சிவானுபவ விருப்பம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்


மின்னே ரனைய பூங்கழல்கள் அடைந்தார் கடந்தார் வியனுலகம் பொன்னே ரனைய மலர்கொண்டு போற்றா நின்றார் அமரரெல்லாம் கல் நேரனைய மனக்கடையாய்க் கழிப்புண் டவலக் கடல்வீழ்ந்த என்னே ரனையேன் இனியுன்னைக் கூடும் வண்ணம் இயம்பாயே  1
என்னால் அறியாப் பதம்தந்தாய் யான தறியா தேகெட்டேன்
உன்னால் ஒன்றுங் குறைவில்லை உடையாய் அடிமைக் காரென்பேன்
பன்னாள் உன்னைப் பணிந்தேத்தும் பழைய அடியா ரொடுங்கூடா
தென்நா யகமே பிற்பட்டிங் கிருந்தென் நோய்க்கு விருந்தாயே.  2 
சீல மின்றி நோன்பின்றிச் செறிவே யின்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக்
கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே.  3 
கெடுவென் கெடுமா கெடுகின்றேன் கேடி லாதாய் பழிகொண்டாய்
படுவேன் படுவ தெல்லாம்நான் பட்டாற் பின்னைப் பயனென்னே
கொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளுங் குருமணியே
நடுவாய் நில்லா தொழிந்தக்கால் நன்றோ எங்கள் நாயகமே.  4 
தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ நம்பி யினித்தான் நல்குதியே
தாயே யென்றுன் தாளடைந்தேன் தயாநீ என்பால் இல்லையே
நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ.  5 
கோவே யருள வேண்டாவோ கொடியேன் கெடவே அமையுமே
ஆவா வென்னா விடிலென்னை அஞ்சேல் என்பார் ஆரோதான்
சாவா ரெல்லாம் என்னளவோ தக்க வாறன் றென்னாரோ
தேவே தில்லை நடமாடீ திகைத்தேன் இனித்தான் தேற்றாயே.  6 
நரியைக் குதிரைப் பரியாக்கி ஞால மெல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதி செய்வ தொன்றும் அறியேனே.  7 
  

திருச்சிற்றம்பலம்

49. திருப்படையாட்சி

 49. திருப்படையாட்சி

கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)

சீவோபாதி ஒழிதல்; பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்

கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்துவெளிப்படும் ஆகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே.  1 
ஒன்றினொ டொன்றுமோ ரைந்தினொ டைந்தும் உயிர்ப்பறு மாகாதே
உன்னடியார் அடியார் அடியோம் என உய்ந்தன ஆகாதே 
கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே
காரணமாகும் அனாதி குணங்கள் கருத்துறு  மாகாதே
நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன வாகாதே
நாமுமெ லாமடி யாருட னேசெல நண்ணுது மாகாதே
என்றுமென் அன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே
ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே.  2 
பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடு மாகாதே
பாவனை யாய கருத்தினில் வந்த பராவமு தாகாதே
அந்த மிலாத அகண்டமும் நம்முள் அகப்படு மாகாதே
ஆதி முதற்பர மாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே
செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடு மாகாதே
சேலன கண்கள் அவன்திரு மேனி திளைப்பன வாகாதே
இந்திர ஞால இடர்ப்பிற வித்துய ரேகுவ தாகாதே
என்னுடை நாயக னாகியஈசன் எதிர்ப்படு மாயிடிலே.  3 
என்னணி யார்முலை ஆகம் அளைந்துடன் இன்புறு மாகாதே
எல்லையில் மாக்கரு ணைக்கடல் இன்றினி தாடுது மாகாதே
நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே
நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவ தாகாதே
மன்னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவ தாகாதே
மாமறை யும் அறியாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே
இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவ தாகாதே
என்னை யுடைப்பெரு மான் அருள் ஈசன் எழுந்தரு ளப்பெறிலே.  4 
மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கறு மாகாதே
வானவ ரும்அறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே
கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த கலக்கறு மாகாதே
காதல்செயும் அடியார்மனம் இன்று களித்திடு மாகாதே
பெண்ணலி ஆணென நாமென வந்த பிணக்கறு மாகாதே
பேரறி யாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே
எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே
என்னையுடைப் பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப் பெறிலே.  5 
பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே
பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே
மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படுமாகாதே
வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே
தன்னடி யாரடி என்தலை மீது தழைப்பன ஆகாதே
தானடி யோம் உடனேயுயவந்து தலைப்படு மாகாதே
இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே
என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே.  6 
சொல்லிய லாதெழு தூமணி யோசை சுவைதரு மாகாதே
துண்ணென என்னுளம் மன்னியசோதி தொடர்ந்தெழு மாகாதே
பல்லியல் பாய பரப்பற வந்த பராபர மாகாதே
பண்டறி யாதப ரானுப வங்கள் பரந்தெழு மாகாதே
வில்லியல் நன்னுத லார்மயல் இன்று விளைந்திடு மாகாதே
விண்ணவரும் அறியாத விழுப்பொருள் இப்பொரு ளாகாதே
எல்லையி லாதன எண்குண மானவை எய்திடு மாகாதே
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்திரு ளப் பெறிலே.  7 
சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே
சாதிவி டாதகுணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே
அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே
ஆசைஎலாம் அடியாரடியோம் எனும் அத்தனை யாகாதே
செங்கயல் ஒண்கண்மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே
சீரடியார்கள் சிவானுப வங்கள் தெரிந்திடு மாகாதே
எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே
ஈறறி யாமறை யோன் எனைஆள எழுந்தரு ளப் பெறிலே.  8 

திருச்சிற்றம்பலம்

Tuesday, August 18, 2020

48. பண்டாய நான்மறை


48. பண்டாய நான்மறை

திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) அருளிச்செய்யப்பட்டது.

அனுபவத்துக்கு ஐயமின்மை உரைத்தல்; நேரிசை வெண்பா.

திருச்சிற்றம்பலம்

பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
கண்டாரு மில்லை கடையேனைத்- தொண்டாகக்
கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை.  1 
உள்ள மலமூன்றும்மாய உகுபெருந்தேன்
வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த- வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்
கருவுங் கெடும்பிறவிக் காடு.  2 
காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டிற் பரிப்பாகன் நம்வினையை- வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து.  3 
வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்
தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ்- சூழ்ந்தமரர்
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர்.  4 
நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின்
மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
கழியா திருந்தவனைக் காண்.  5 
காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்
பேணும் அடியார் பிறப்பகலக் - காணும்
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
பிரியானை வாயாரப் பேசு.  6 
பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த
மாசில் மணியின் மணிவார்த்தை - பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருந்தினடி என்மனத்தே வைத்து.  7 

திருச்சிற்றம்பலம்

47. திருவெண்பா

                                          47. திருவெண்பா

திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்அருளிச்செய்யப்பட்டது.

அணைந்தோர் தன்மை; நேரிசை வெண்பா.

திருச்சிற்றம்பலம்


வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப் பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ மருவா திருந்தேன் மனத்து.  1
ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
பார்க்கோ பரம்பரனே என்செய்கேன்- தீர்ப்பரிய
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
தானென்பர் ஆரொருவர் தாழ்ந்து.  2 
செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே
உய்யும் வகையின் உயிர்ப்பறியேன்- வையத்
திருந்துறையுள் வேல்மடுத்தென் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான்.  3 
முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்
பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்- தென்னன்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
வருந்துயரந் தீர்க்கும் மருந்து.  4 
அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற
மறையோனும் மாலுமால் கொள்ளும்- இறையோன்
பெருந்துறையுள் மேய பெருமான் பிரியா
திருந்துறையும் என்னெஞ்சத் தின்று.  5 
பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்
மத்தமே யாக்கும் வந்தென்மனத்தை- அத்தன்
பெருந்துறையான் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்
மருந்திறவாப் பேரின்பம் வந்து.  6 
வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி
ஆரா அமுதாய் அமைந்தன்றே- சீரார்
திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய
ஒருத்தன் பெருக்கும் ஒளி.  7 
யாவார்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
யாவர்க்கும் கீழாம் அடியேனை- யாவரும்
பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்
மற்றறியேன் செய்யும் வகை.  8 
மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
தேவரும் காணாச் சிவபெருமான்- மாவேறி
வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க
மெய்யகத்தே இன்பம் மிகும்.  9 
இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்
திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம்- தருங்காண்
பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன்
மருந்துருவாய் என்மனத்தே வந்து.  10 
இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும்
துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் - அன்பமைத்துச்
சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊராகக் கொண்டான் உவந்து.  11 

திருச்சிற்றம்பலம்

Sunday, August 16, 2020

46. திருப்படையெழுச்சி

 46. திருப்படையெழுச்சி

கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)

பிரபஞ்சப்போர்; கலிவிருத்தம்.

திருச்சிற்றம்பலம்


ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்
மானமா ஏறும்ஐயர் மதிவெண் குடைகவிமின்
ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள்
வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே.  1 

தொண்டர்காள் தூசிசெல்லீர் பத்தர்காள் சூழப்போகீர் ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள் திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள் அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே.  2

  
திருச்சிற்றம்பலம்

45. யாத்திரைப் பத்து

 45. யாத்திரைப் பத்து

கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)

அனுபவாதீதம் உரைத்தல்;அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.   

திருச்சிற்றம்பலம்


பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால் ஆவா என்னப் பட்டன்பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமின் போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே.  1
புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் 
  பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா 
  போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து நாயே 
  அனைய நமையாண்ட
தகவே யுடையான் தனைச்சாரத் தளரா 
  திருப்பார் தாந்தாமே.  2 
தாமே தமக்குச் சுற்றமும் தாமே 
  தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார் என்ன
  மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் 
  குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன் 
  ஆள்வான் பொன்னடிக்கே.  3 
அடியார் ஆனீர் எல்லீரும் அகல 
  விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் 
  டிருமின் திருக்குறிப்பைச்
செடிசே ருடலைச் செலநீக்கிச் சிவலோ
  கத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேனிப் புயங்கன்தன் 
  பூவார் கழற்கே புகவிடுமே.  4 
விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் 
  காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ 
  வதற்கே ஒருப் படுமின் 
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத் துள் அணியார் 
  கதவ தடையாமே
புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கன் 
  ஆள்வான் புகழ்களையே.  5 
புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன்  
  தாளே புந்திவைத்திட்டு
இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் 
  இடையூ றடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று 
  சிவன்தாள் வணங்கிநாம்
நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் 
  உருகி நிற்போமே.  6 
நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் 
  இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் 
  ஆள்வான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும்  
  பரிசே ஒருப்படுமின் 
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் 
  கரியன் பெருமானே.  7 
பெருமான் பேரானந்தத்துப் பிரியா 
  திருக்கப் பெற்றீர்காள் 
அருமா லுற்றுப் பின்னைநீர் அம்மா 
  அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவம் திறந்த
  போதே சிவபுரத்துத்   
திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் 
  சென்று சேர்வோமே.  8 
சேரக் கருதிச் சிந்தனையைத் திருந்த 
  வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் 
  புயங்கன் அருளமுதம்
ஆரப் பருகி ஆராத ஆர்வங்
  கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் 
  கிடந்து புரளாதே.  9 
புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே 
  வந்தா ளாகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் 
  கலங்கி மயங்குவீர்
தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ 
  கக்கோன் திருப்புயங்கன்
அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ 
  அந்தோ அந்தோவே.  10   

திருச்சிற்றம்பலம்

51. அச்சோப் பதிகம்

  51. அச்சோப் பதிகம் கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)  அனுபவவழி அறியாமை; கலிவிருத்தம். திருச்சிற்றம்பலம் முத்திநெறி அறியா...