Friday, August 7, 2020

37. பிடித்தபத்து

 37. பிடித்தபத்து

சீர்காழி - 5-தோணிபுரம் அருளிச்செய்யப்பட்டது.

 முத்திக்கலப்புரைத்தல்; எழுசீர் ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்

உம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த 
  யோகமே ஊற்றையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழுதாண்டு 
  வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே 
  செல்வமே சிவபெருமானே
எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் 
  எங்கெழுந் தருளுவ தினியே.  1 
விடைவிடா துகந்த விண்ணவர் கோவே 
  வினையனே னுடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தறமண்ணாய் 
  முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட 
  கடவுளே கருணைமா கடலே
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் 
  எங்கெழுந் தருளுவ தினியே.  2 
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே 
  அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் 
  புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த 
  செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் 
  எங்கெழுந் தருளுவ தினியே.  3 
அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே 
  பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த 
  போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த 
  செல்வமே சிவபெருமானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் 
  எங்கெழுந் தருளுவ தினியே.  4 
ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் 
  உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு 
  விழுமிய தளித்ததோர் அன்பே
செப்புதற் கரிய செழுந்சுடர் மூர்த்தீ 
  செல்வமே சிவபெருமானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் 
  எங்கெழுந் தருளுவ தினியே.  5 
அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்
  டளவிலா ஆனந்த மருளிப்
பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட 
  பிஞ்ஞகா பெரியஎம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன் 
  செல்வமே சிவபெருமானே
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் 
  எங்கெழுந் தருளுவ தினியே.  6 
பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் 
  பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து 
  பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ  
  செல்வமே சிவபெருமானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் 
  எங்கெழுந் தருளுவ தினியே.  7 
அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற 
  ஆதியே யாதும்ஈ றில்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த 
  செல்வமே சிவபெருமானே
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப் 
  பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் 
  எங்கெழுந் தருளுவ தினியே.  8 
பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் 
  பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி 
  உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த 
  செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் 
  எங்கெழுந் தருளுவ தினியே.  9 
புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் 
  பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட 
  ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந் 
  தொடக்கெலாம் அறுத்தநற்சோதி
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் 
  எங்கெழுந் தருளுவ தினியே.  10  

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

51. அச்சோப் பதிகம்

  51. அச்சோப் பதிகம் கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)  அனுபவவழி அறியாமை; கலிவிருத்தம். திருச்சிற்றம்பலம் முத்திநெறி அறியா...