Friday, July 31, 2020

30. திருக்கழுக்குன்றப் பதிகம்

30. திருக்கழுக்குன்றப் பதிகம்

திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) அருளிச்செய்யப்பட்டது.

குரு தரிசனம்; ஏழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்


பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க் கிணக்கிலாததோர் இன்ப மேவருந் துன்ப மேதுடைத் தெம்பிரான் உணக்கிலாததோர் வித்துமேல்விளை யாமல் என்வினை ஒத்தபின் கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.  1
பிட்டு நேர்பட மண் சுமந்த பெருந்துறைப்பெரும் பித்தனே
சட்டநேர்பட வந்திலாத சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்
சிட்டனே சிவலோகனேசிறு நாயினுங்கடையாய வெங்
கட்டனேனையும் ஆட்கொள்வான்வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.  2 
மலங்கினேன் கண்ணின்நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை
விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவதறிந்திலேன்
இலங்குகின்றநின்சேவடிகள் இரண்டும் வைப்பிடமின்றியே
கலங்கினேன் கலங்காமலேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.  3 
பூணொணாததொரன்பு பூண்டு பொருந்திநாள்தொறும் போற்ற வும்
நாணொணாததொர்நாணம் எய்தி நடுக்கடலுள் அழுந்திநான்
பேணொணாதபெருந்துறைப்பெருந் தோணிபற்றியுகைத்தலுங்
காணொணாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.  4 
கோலமேனிவராக மேகுணமாம் பெருந்துறைக்கொண்டலே
சீலமேதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி
ஞாலமேகரியாக நானுனை நச்சி நச்சிட வந்திடுங்
காலமேஉனை ஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.  5 
பேதம் இல்லதோர் கற்பளித்த பெருந்துறைப் பெருவெள்ளமே
ஏதமேபல பேசநீஎனை ஏதிலார் முனம் என்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமையற்ற தனிச்சரண் சரணாமெனக்
காதலால் உனைஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.  6 
இயக்கி மாரறு பத்து நால்வரை எண்குணம்செய்த ஈசனே
மயக்க மாயதொர் மும்மலப்பழ வல்வினைக்குள் அழுந்தவும்
துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின் தூய்மலர்க்கழல் தந்தெனைக்
கயக்க வைத்தடி யார்முனேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.  7 
 

திருச்சிற்றம்பலம்

 

29. அருட்பத்து

 

29.  அருட்பத்து

திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) அருளிச்செய்யப்பட்டது.

மகாமாயா சுத்தி; எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்


சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய் பங்கயத் தயனுமா லறியா நீதியே செல்வத் திருப்பெருந்துறையில் நிறைமலர்க் குருந்தமே வியசீர் ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே.  1
நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்
  கண்ணனே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட்டலறி
  உலகெலாந் தேடியுங் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறையில்
  செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
  அதெந்துவே என்றரு ளாயே.  2 
எங்கள்நாயகனே என்னுயிர்த் தலைவா
  ஏலவார் குழலிமார் இருவர்
தங்கள் நாயகனே தக்கநற்காமன்
  தனதுடல் தழலெழ விழித்த
செங்கண்நாயகனே திருப்பெருந்துறையில்
  செழுமலர்க் குருந்தமே வியசீர்
அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால்
  அதெந்துவே என்றருளாயே.  3 
கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக்
  கண்ணனும் நண்ணுதற்கரிய
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன
  வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில்
  செழுமலர்க் குருந்தமே வியசீர்
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்
  அதெந்துவே என்றரு ளாயே.  4 
துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை
  துணைமுலைக் கண்கள்தோய் சுவடு
பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு
  பொங்கொளி தங்குமார் பினனே
செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந்துறையில்
  செழுமலர்க் குருந்தமே வியசீர்
அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்
  அதெந்துவே என்றரு ளாயே.  5 
துப்பனே தூயாய் தூயவெண்ணீறு
  துதைந்தெழு துளங்கொளி வயிரத்
தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின்
  உறுசுவை அளிக்கும் ஆரமுதே
செப்பமா மறைசேர் திருப்பெருந்துறையில்
  செழுமலர்க் குருந்தமே வியசீர்
அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்
  அதெந்துவே என்றரு ளாயே.  6 
மெய்யனே விகிர்தா மேருவே வில்லா
  மேவலர் புரங்கள் மூன்றெரித்த
கையனே காலாற் காலனைக் காய்ந்த
  கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்
செய்யனே செல்வத் திருப்பெருந்துறையில்
  செழுமலர்க் குருந்தமே வியசீர்
ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்
  அதெந்துவே என்றரு ளாயே.  7 
முத்தனே முதல்வா முக்கணா முனிவா
  மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
  பரகதி கொடுத்தருள் செய்யுஞ்
சித்தனே செல்வத் திருப்பெருந்துறையில்
  செழுமலர்க் குருந்தமே வியசீர்
அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
  அதெந்துவே என்றரு ளாயே.  8
மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி
  மறுமையோ டிம்மையுங் கெடுத்த
பொருளனே புனிதா பொங்குவா ளரவங்
  கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்
தெருளுநான் மறைசேர் திருப்பெருந்துறையில்
  செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்
  அதெந்துவே என்றரு ளாயே.  9 
திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையில்
  செழுமலர்க் குருந்தமே வியசீர்
இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்
  டென்னுடை யெம்பிரான் என்றென்
றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்
  அலைகடல் அதனுளே நின்று
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
  போதராய் என்றரு ளாயே.  10 

திருச்சிற்றம்பலம்

Thursday, July 30, 2020

28. வாழாப்பத்து


28. வாழாப்பத்து


திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) அருளிச்செய்யப்பட்டது.

முத்தி உபாயம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


திருச்சிற்றம்பலம்


பாரொடு விண்ணாய்ப் பரந்த எம் பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே.  1
வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே 
  மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
உம்பரும் அறியா ஒருவனே இருவர்க் 
  குணர்விறந்துலக மூடுருவுஞ்
செம்பெருமானே சிவபுரத்தரசே 
  திருப்பெருந்துறையுறை சிவனே
எம்பெருமானே என்னையாள்வானே 
  என்னைநீ கூவிக் கொண்டருளே.  2 
பாடிமால் புகழும் பாதமே அல்லால் 
  பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே 
  திருப்பெருந்துறையுறை சிவனே
ஊடுவ துனனோ டுவப்பதும் 
  உன்னை உணர்த்துவ துனக்கெனக்குறுதி
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் 
  வருகஎன்றருள் புரியாயே.  3 
வல்லைவாளரக்கர் புரமெரித்தானே  
 மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசே 
  திருப்பெருந்துறையுறை சிவனே
எல்லைமூவுலகும் உருவியன் றிருவர்  
 காணும்நாள் ஆதியீ றின்மை
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் 
  வருக என்றருள் புரியாயே.  4 
பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால் 
  பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே 
  திருப்பெருந்துறையுறை சிவனே
எண்ணமே உடல்வாய் மூக்கொடு 
  செவிகண் என்றிவை நின்கணே வைத்து
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் 
  வருகஎன்றருள் புரியாயே.  5 
பஞ்சின்மெல்லடியாள் பங்கநீ யல்லால் 
  பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே 
  திருப்பெருந்துறையுறை சிவனே
அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த 
  அருளினை மருளினால் மறந்த
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் 
  வருக என்றருள் புரியாயே.  6 
பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால் 
  பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திருவுயர்கோலச் சிவபுரத்தரசே 
  திருப்பெருந்துறையுறை சிவனே
கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் 
  கலந்துநான் வாழுமா றறியா 
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் 
 வருக என்றருள் புரியாயே.  7 
பந்தணை விரலாள் பங்கநீ யல்லால் 
  பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே 
  திருப்பெருந்துறையுறை சிவனே
அந்தமில் அமுதே அரும்பெரும் பொருளே 
  ஆரமுதே அடியேனை
வந்துய ஆண்டாய் வாழ்கிலேன் 
  கண்டாய் வருக என்றருள் புரியாயே.  8 
பாவநாசாவுன் பாதமே யல்லால் 
  பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேவர் தந்தேவே சிவபுரத்தரசே 
  திருப்பெருந்துறையுறை சிவனே
மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் 
  முழங்கழலாய் நிமிர்ந்தானே
மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் 
  வருக என்றருள் புரியாயே.  9 
பழுதில்தொல் புகழாள் பங்கநீயல்லால் 
  பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே 
  திருப்பெருந்துறையுறை சிவனே
தொழுவனோ பிறரைத் துதிப்பனோ 
  எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய்
மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் 
  வருக என்றருள் புரியாயே.  10 
  

திருச்சிற்றம்பலம்

Wednesday, July 29, 2020

27. புணர்ச்சிப்பத்து

27. புணர்ச்சிப்பத்து

 திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்அருளிச்செய்யப்பட்டது.

அத்துவித இலக்கணம்ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்


சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை வாளா தொழும்புகந்து கடைபட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனைக் கருமால் பிரமன் தடைபட் டின்னுஞ் சார மாட்டாத் தன்னைத் தந்த என்னா ரமுதைப் புடைபட் டிருப்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே.  1
ஆற்ற கில்லேன் அடியேன் அரசே அவனி தலத்தைம் புலனாய
சேற்றி லழுந்தாச் சிந்தைசெய்து சிவனெம் பெருமானென்றேத்தி
ஊற்று மணல்போல் நெக்குநெக் குள்ளே உருகி ஓலமிட்டுப்
போற்றிநிற்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே.  2 
நீண்டமாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை
ஆண்டுகொண்ட என் ஆரமுதை அள்ளுறுள்ளத் தடியார்முன்
வேண்டுந் தனையும் வாய்விட்டலறி விரையார் மலர் தூவிப்
பூண்டு கிடப்ப தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.  3 
அல்லிக் கமலத் தயனும் மாலும் அல்லா தவரும் அமரர்கோனுஞ்
சொல்லிப் பரவும் நாமத் தானைச் சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின் சுவையைப்
புல்லிப் புணர்வ தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.  4 
திகழத் திகழும் அடியும் முடியுங் காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்
அகழப் பறந்துங் காண மாட்டா அம்மான் இம்மா நிலமுழுதும்
திகழப் பணிகொண்டென்னை ஆட்கொண்டு ஆ ஆ என்ற நீர்மையெல்லாம்
புகழப் பெறுவ தென்று கொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே.  5 
பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற் கருள் செய்யப்
பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமா லுற்றேன் என்றென்று
சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர் உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்ப்
புரிந்து நிற்பதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.  6 
நினையப்பிறருக் கரிய நெருப்பை  நீரைக் காலை நிலனை விசும்பைத்
தனையொப் பாரை யில்லாத் தனியை நோக்கித் தழைத்துத் தழுத்தகண்டம்
கனையக் கண்ணீர் அருவி பாயக் கையுங் கூப்பிக் கடிமலராற்
புனையப் பெறுவதென்று கொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே.  7 
நெக்குநெக்குள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றிச்
செக்கர்போலும் திருமேனிதிகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப்
புக்கு நிற்ப தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.  8 
தாதாய் மூவே ழுலகுக்குங் தாயே நாயேன் தனையாண்ட
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும்
ஏதாம் மணியே என்றென்றேத்தி இரவும் பகலும் எழிலார்பாதப்
போதாய்ந் தணைவதென்று கொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே.  9 
காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங் கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம்
மூப்பாய் மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனையாண்ட
பார்ப்பானே எம்பரமா என்று பாடிப் பாடிப் பணிந்து பாதப்
பூப்போதணைவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே.  10 

  திருச்சிற்றம்பலம்

Tuesday, July 28, 2020

26. அதிசயப்பத்து

26. அதிசயப்பத்து

 திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) அருளிச்செய்யப்பட்டது.
முத்தி இலக்கணம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்


வைப்பு மாடென்றும் மாணிக்கத் தொளியென்றும் மனத்திடை உருகாதே செப்பு நேர்முலை மடவரலியர்தங்கள் திறத்திடை நைவேனை ஒப்பிலாதான உவமனி லிறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்து அப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.  1
நீதியாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவ ரொடுங்கூடேன்
ஏதமே பிறந்திறந்துழல்வேன்றனை என்னடி யானென்று
பாதி மாதொடுங் கூடிய பரம்பரன் நிரந்தர மாய் நின்ற
ஆதிஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.  2 
முன்னை என்னுடை வல்வினை போயிட முக்கண துடையெந்தை
தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்குப்
பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதியதுவைத்த
அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.  3 
பித்த னென்றெனை உலகவர் பகர்வ தோர் காரணம்இதுகேளீர் 
ஒத்துச் சென்றுதன் திருவருட் கூடிடும் உபாயம தறியாமே
செத்துப் போய்அருநரகிடை வீழ்வதற்  கொருப்படு கின்றேனை 
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.  4 
பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன் பன்மலர் பறித்தேத்தேன்
குரவு வார் குழலார் திறத்தே நின்று குடிகெடு கின்றேனை
இரவு நின்றெரி யாடிய எம்மிறை  எரிசடை மிளிர்கின்ற
அரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.  5 
எண்ணிலேன் திருநாமவஞ் செழுத்தும்என் ஏழைமை யதனாலே
நண்ணிலேன் கலைஞானிகள் தம்மொடு நல்வினை நயவாதே
மண்ணிலே பிறந்திறந்து மண்ணாவதற் கொருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.  6 
பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதிநின்று இடர்க்கடற் சுழித்தலைப் படுவேனை
முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.  7 
நீக்கி முன்னென்னைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத் தெழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.  8 
உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போல்
பற்றலாவ தோர் நிலையிலாப் பரம்பொருள் அப்பொருள் பாராதே
பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்சொல் தெளியாமே
அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.  9 
இருள்திணிந்தெழுந்திட்டதோர் வல்வினைச் சிறுகுடி லிதுவித்தைப் 
பொருளெனக்களித் தருநரகத்திடை விழப்புகுகின்றேனைத்
தெருளும் மும்மதில் நொடிவரை யிடிதரச் சினப்பதத் தொடுசெந்தீ
அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே.  10 
  

திருச்சிற்றம்பலம்

Monday, July 27, 2020

25. ஆசைப்பத்து

25. ஆசைப்பத்து


 திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) அருளிச்செய்யப்பட்டது.

ஆத்தும இலக்கணம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.


திருச்சிற்றம்பலம்

கருடக்கொடியோன் காணமாட்டாக் கழற்சே வடியென்னும்
பொருளைத் தந்திங் கென்னை யாண்ட பொல்லா மணியேயோ
இருளைத் துரந்திட் டிங்கே வாவென்றங்கே கூவும்
அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.  1 
மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த
குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ
எப்பா லவர்க்கும் அப்பாலாம்என் ஆரமு தேயோ
அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.  2 
சீவார்ந் தீமொய்த் தழுக்கொடு திரியுஞ் சிறுகுடில் இது சிதையக்
கூவாய் கோவே கூத்தா காத்தாட் கொள்ளுங் குருமணியே
தேவா தேவர்க் கரியானே சிவனே சிறிதென் முகநோக்கி
ஆவா வென்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.  3 
மிடைந்தெலும் பூத்தை மிக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடம்
தொடர்ந்தெனை நலியத் துயருறு கின்றேன் சோத்தம் எம்பெருமானே
உடைந்துநைந் துருகி உன்னொளி நோக்கி உன்திரு மலர்ப்பாதம் 
அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.  4 
அளிபுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை
புளியம் பழமொத் திருந்தேன் இருந்தும்விடையாய் பொடியாடீ 
எளிவந்தென்னை ஆண்டுகொண்ட என்னாரமுதேயோ
அளியேன் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.  5 
எய்த்தேன் நாயேன் இனியிங் கிருக்க கில்லேன் இவ்வாழ்க்கை
வைத்தாய் வாங்காய் வானோர் அறியா  மலர்ச்சே வடியானே
முத்தா உன்றன் முகவொளி நோக்கி முறுவல் நகைகாண
அத்தா சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.  6 
பாரோர் விண்ணோர் பரவியேத்தும் பரனே பரஞ்சோதி
வாராய் வாரா வுலகந்தந்து வந்தாட்கொள்வானே
பேராயிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் என ஏத்த
ஆரா அமுதே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.  7 
கையால் தொழுதுன் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண்டு
எய்யா தென்றன்தலைமேல் வைத்தெம் பெருமான் பெருமானென்று
ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர் மெழுகொப்ப
ஐயாற் றரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.  8 
செடியா ராக்கைத் திறமற வீசிச் சிவபுரநகர்புக்குக்
கடியார் சோதி கண்டுகொண்டென் கண்ணினை களிகூரப்
படிதா னில்லாப் பரம்பரனே உன்பழஅடியார் கூட்டம்
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.  9 
வெஞ்சேலனைய கண்ணார்தம் வெகுளிவலையில் அகப்பட்டு
நைஞ்சேன் நாயேன் ஞானச் சுடரே நானோர் துணைகாணேன்
பஞ்சேரடியாள் பாகத்தொருவா பவளத் திருவாயால்
அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.  10 
 

திருச்சிற்றம்பலம்

Sunday, July 26, 2020

24. அடைக்கலப்பத்து

24. அடைக்கலப்பத்து


 திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) அருளிச்செய்யப்பட்டது.

 பக்குவ நிண்ணயம்; கலவைப் பாட்டு.


திருச்சிற்றம்பலம்

செழுக்கமலத் திரளனநின் சேவடி சேர்ந்தமைந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே.  1 
வெறுப்பனவே செய்யும் என்சிறு மையைநின் பெருமையினால் 
பொறுப்பவனே அராப் பூண்பவ னேபொங்கு கங்கைசடைச் 
செறுப்பவனே நின்திருவரு ளால்என் பிறவியைவேர்
அறுப்பவனே உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.  2 
பெரும்பெருமான்என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத்
தரும்பெருமான் சதுரப்பெரு மான் என் மனத்தினுள்ளே
வரும்பெருமான் மலரோன் நெடு மாலறியாமல் நின்ற
அரும்பெருமான் உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.  3 
பொழிகின்ற துன்பப் புயல்வெள் ளத்தில்நின் கழற்புணைகொண்
டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய
அழிகின்ற னன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.  4 
சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறம்மறந்திங்கு
இருள்புரி யாக்கையிலே கிடந் தெய்த்தனன் மைத்தடங்கண்
வெருள்புரி மான்அன்ன நோக்கிதன் பங்கவிண் ணோர்பெருமான்
அருள்புரி யாய்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.  5 
மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து
தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள்
வாழியெப் போதுவந் தெந்நாள் வணங்குவன் வல்வினையேன்
ஆழியப் பாவுடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.  6 
மின்கணினார் நுடங்கும் இடையார் வெகுளிவலையில் அகப்பட்டுப்
புன்கண னாய்ப்புரள் வேனைப் புரளாமற் புகுந்தருளி
என்கணி லேஅமு தூறித் தித்தித்தென் பிழைக்கிரங்கும்
அங்கண னேஉடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.  7 
மாவடு வகிரன்ன கண்ணிபங் காநின் மலரடிக்கே
கூவிடு வாய்கும்பிக் கேயிடு வாய்நின் குறிப்பறியேன்
பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்ததுள்ளம்
ஆகெடு வேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.  8 
பிறிவறி யாஅன்பர் நின்னருட் பெய்கழல் தாளிணைக்கீழ்
மறிவறி யாச்செல்வம் வந்துபெற் றார் உன்னை வந்திப்பதோர்
நெறியறி யேன்நின்னை யேஅறி யேன்நின்னையே அறியும்
அறிவறி யேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.  9 
வழங்குகின் றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின் றேன்விக்கி  னேன்வினையேன்என் விதியின்மையால்
தழங்கருந் தேனன்ன தண்ணீர்  பருகத்தந் துய்யக்கொள்ளாய்
அழுங்குகின் றேன்உடை யாய்அடி யேன்உன் அடைக்கலமே.  10 

திருச்சிற்றம்பலம்

Saturday, July 25, 2020

23. செத்திலாப்பத்து

23. செத்திலாப்பத்து

கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)
சிவானந்தம் அளவறுக்கொணாமை
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்


பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமுதூறும் புதுமலர்க்கழலிணையடி பிரிந்தும் கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன் ஐயனே அரசே அருட்பெருங் கடலே அத்தனே அயன் மாற்கறி யொண்ணாச் செய்யமே னியனே செய்வகை அறியேன் திருப்பெருந்துறை மேவிய சிவனே.  1
புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
  உண்டி யாய் அண்ட வாணரும் பிறரும்
வற்றியாரும் நின்மலரடி காணா
  மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
பற்றினாய் பதையேன் மனமிக உருகேன்
  பரிகிலேன் பரியாவுடல் தன்னைச்
செற்றிலேன் இன்னுந் திரிதருகின்றேன்
  திருப்பெருந்துறை மேவிய சிவனே.  2 
புலைய னேனையும் பொருளென நினைந்துன்
  அருள்புரிந்தனை புரிதலுங் களித்துத்
தலையினால் நடந்தேன் விடைப்பாகா
  சங்கரா எண்ணில் வானவர்க்கெல்லாம்
நிலையனே அலைநீர்விடமுண்ட நித்தனே
  அடையார்புர மெரித்த
சிலையனே யெனைச் செத்திடப் பணியாய்
  திருப்பெருந்துறை மேவிய சிவனே.  3 
அன்பராகிமற் றருந்தவம் முயல்வார்
  அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம்
என்பராய் நினைவார் எனைப்பலர்
  நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய்
வன்பராய் முருடொக்கும் என்சிந்தை
  மரக்கண் என்செவி இரும்பினும் வலிது
தென்பராய்த் துறை யாய் சிவலோகா
  திருப்பெருந்துறை மேவிய சிவனே.  4 
ஆட்டுத்தேவர் தம் விதியொழித் தன்பால்
  ஐயனே என்றுன் அருள்வழி யிருப்பேன்
நாட்டுத்தேவரும் நாடரும் பொருளே
  நாதனே உனைப் பிரிவுறா அருளைக் 
காட்டித்தேவநின் கழலிணை காட்டிக்
  காயமாயத்தைக் கழித்தருள் செய்யாய்
சேட்டைத்தேவர்தந் தேவர்பிரானே
  திருப்பெருந்துறை மேவிய சிவனே.  5 
அறுக்கிலேன் உடல்துணிபடத்தீப்புக்
  கார்கிலேன் திருவருள் வகையறியேன்
பொறுக்கிலேன்உடல் போக்கிடங் காணேன்
  போற்றி போற்றியென் போர்விடைப் பாகா
இறக்கிலேன் உனைப்பிரிந்தினிதிருக்க
  என்செய்கேன்இது செய்க என்றருளாய்
சிறைக்கணே புனல் நிலவிய வயல்சூழ்
  திருப்பெருந்துறை மேவிய சிவனே.  6 
மாயனேமறிகடல்விடம் உண்ட
  வானவாமணி கண்டத்தெம் அமுதே 
நாயினேன் உனைநினையவும் மாட்டேன்
  நமச்சிவாய என் றுன்னடி பணியாப் 
பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய்
  பிறைகுலாஞ்சடைப் பிஞ்ஞகனேயோ
சேயனாகிநின்றலறுவ தழகோ
  திருப்பெருந்துறை மேவிய சிவனே.  7 
போது சேரயன் பொருகடற் கிடந்தோன்
  புரந்த ராதிகள் நிற்கமற்றென்னைக்
கோதுமாட்டிநின் குரைகழல் காட்டிக்
  குறிக்கொள் கென்றுநின்தொண்டரிற் கூட்டாய்
யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே
  அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ
சீதவார்புனல் நிலவிய வயல்சூழ்
  திருப்பெருந்துறை மேவிய சிவனே.  8 
ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்
  நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய்
காலன் ஆர்உயிர்கொண்ட பூங்கழலாய்
  கங்கை யாய் அங்கி தங்கிய கையாய்
மாலும் ஓலமிட்டலறும் அம்மலர்க்கே
  மரக்க ணேனையும் வந்திடப் பணியாய்
சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்
  திருப்பெருந்துறை மேவிய சிவனே.  9 
அளித்துவந்தெனக் காவஎன்றருளி
  அச்சந்தீர்த்தநின் அருட்பெருங்கடலில்
திளைத்துந்தேக்கியும் பருகியும் உருகேன்
  திருப்பெருந்துறை மேவிய சிவனே
வளைக்கை யானொடு மலரவன் அறியா
  வான வாமலை மாதொரு பாகா
களிப்பெலாம் மிகக் கலங்கிடு கின்றேன்
  கயிலை மாமலை மேவிய கடலே.  10 
  

திருச்சிற்றம்பலம்

Friday, July 24, 2020

22. கோயில் திருப்பதிகம்

22. கோயில் திருப்பதிகம்


கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)

அனுபோக இலக்கணம்; எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.


திருச்சிற்றம்பலம்

மாறிநின்றென்னை மயக்கிடும் வஞ்சப்
  புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி
  உள்ளவா காணவந்தருளாய்
தேறலின் தெளிவே சிவபெருமானே
  திருப்பெருந்துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த
  இன்பமே என்னுடை அன்பே.  1 
அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
  ஆனந்த மாய்க் கசிந்துருக
என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
  யானிதற் கிலனொர்கைம்மாறு
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப்
  பரந்த முத்தனே முடிவிலா முதலே
தென்பெருந்துறையாய் சிவபெருமானே
  சீருடைச் சிவபுரத்தரைசே.  2 
அரைசனே அன்பர்க் கடியனே னுடைய
  அப்பனே ஆவியோ டாக்கை
புரைபுரை கனியப் புகுந்துநின்றுருக்கிப்
  பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே
திரைபொரா மன்னும் அமுதத் தெண்கடலே
  திருப்பெருந்துறையுறை சிவனே
உரையுணர் விறந்துநின்றுணர்வதோர் உணர்வே
  யானுன்னை உரைக்குமா றுணர்த்தே.  3 
உணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார்
  உணர்வுக்குந் தெரிவரும் பொருளே
இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே
  எனைப் பிறப் பறுக்கும் எம்மருந்தே
திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே
  திருப்பெருந்துறையுறை சிவனே
குணங்கள் தாமில்லா இன்பமே உன்னைக்
  குறுகினேற் கினியென்ன குறையே.  4 
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
  ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் 
  மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப்பாயும்
  திருப்பெருந்துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
  இனியுன்னை யென்னிரக் கேனே.  5 
இரந்திரந் துருக என்மனத் துள்ளே
  எழுகின்ற சோதியே இமையோர்
சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்
  திருப்பெருந்துறையுறை சிவனே
நிரந்தஆகாயம் நீர்நிலம் தீகால்
  ஆயவை அல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
  கண்ணுறங் கண்டுகொண்டின்றே.  6 
இன்றெனக் கருளி இருள்கடிந்துள்ளத் 
  தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
  நீயலால் பிறிது மற்றின்மை
சென்றுசென்றணுவாய்த் தேய்ந்துதேய்ந்தொன்றாம்
  திருப்பெருந்துறையுறை சிவனே
ஒன்று நீயல்லை அன்றியொன் றில்லை
  யாருன்னை அறியகிற்பாரே.  7 
பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
  பரந்ததோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே நினைவதேல் அரிய
  நின்மலா நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
  திருப்பெருந்துறையுறை சிவனே
ஆருற வெனக்கிங் காரய லுள்ளார்
  ஆனந்தம் ஆக்குமென் சோதி.  8 
சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
  ஒருவனே சொல்லுதற் கரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம்
  அறுக்கும் ஆனந்தமா கடலே
தீதிலா நன்மைத் திருவருட்குன்றே
  திருப்பெருந்துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக்கருளாய்
  வந்துநின் இணையடி தந்தே.  9 
தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச்
  சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
  யாதுநீ பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
  திருப்பெருந்துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
  யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே.  10 

திருச்சிற்றம்பலம்

Thursday, July 23, 2020

21. கோயில் மூத்த திருப்பதிகம்

21. கோயில் மூத்த திருப்பதிகம்


கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)

அநாதியாகிய சற்காரியம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.


திருச்சிற்றம்பலம்

உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் 
  நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப
  தானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும் அரு ளைப்புரி 
  யாய் பொன்னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து முடியும் 
  வண்ணம் முன்னின்றே.  1 
முன்னின் றாண்டாய் எனைமுன்னம் யானும் 
  அதுவே முயல்வுற்றுப்
பின்னின் றேவல் செய்கின்றேன் பிற்பட் 
  டொழிந்தேன் பெம்மானே
என்னின் றருளி வரநின்று போந்தி 
  டென்னா விடில் அடியார்
உன்னின் றிவனார் என்னாரோ பொன்னம் 
  பலக்கூத் துகந்தானே.  2 
உகந்தானே அன்புடை அடிமைக் குருகா
  வுள்ளத் துணர்விலியேன்
சகந்தான் அறிய முறையிட்டால் தக்க
  வாறன் றென்னாரோ
மகந்தான் செய்து வழிவந்தார் வாழ 
  வாழ்ந்தாய் அடியேற்குன்
முகந்தான் தாரா விடின்முடிவேன் பொன்னம் 
  பலத்தெம் முழுமுதலே.  3 
முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்
  கும் என்தனக்கும்
வழிமுதலேநின் பழவடி யார் 
  திரள்வான் குழுமிக்
கெழுமுத லேயருள் தந்தி ருக்கஇரங்
  குங்கொல்லோ என்று
அழுமதுவேயன் றிமற்றென் செய்கேன் 
  பொன்னம் பலத்தரைசே.  4 
அரைசே பொன்னம் பலத்தாடும் 
  அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்
  றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக் 
  காட்சி கொடுத்துன் அடியேன்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா 
  திருந்தால் ஏசாரோ.  5 
ஏசா நிற்பர் என்னைஉனக் கடியான்
  என்று பிறரெல்லாம்
பேசா நிற்பர் யான்தானும் பேணா 
  நிற்பேன் நின்னருளே
தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ 
  லக்கஞ் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் 
  இனித்தான் இரங்காயே.  6 
இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென்று
  ஏமாந் திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய் 
  ஆள்வா ரிலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று 
  நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே 
  வாவென்று அருளாயே.  7 
அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல் 
  என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே 
  பொன்னம் பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்து
  வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே 
  போனாற் சிரியாரோ.  8 
சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு
  திரண்டுன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே
   றிருந்துன் திருநாமம்
தரிப்பார் பொன்னம் பலத்தாடும் தலைவா 
  என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி 
  இனித்தான் நல்காயே.  9 
நல்கா தொழியான் நமக்கென்றுன் நாமம் 
  பிதற்றி நயனநீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா 
  மனத்தால் நினைந்துருகிப்
பல்காலுன்னைப் பாவித்துப் பரவிப் 
  பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய் 
  என்னை உடையானே.  10 
  

திருச்சிற்றம்பலம்

Wednesday, July 22, 2020

20. திருப்பள்ளியெழுச்சி

20. திருப்பள்ளியெழுச்சி


 திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) அருளிச்செய்யப்பட்டது.

திரோதான சுத்தி; எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.


திருச்சிற்றம்பலம்


போற்றியென் வாழ்முத லாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறை உறை சிவபெருமானே ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.  1
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
  அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழவெழ நயனக்
  கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
  திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே
  அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே.  2 
கூவின பூங்குயில் கூவின கோழி
  குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளியொளி உதயத்து
  ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
  திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
  எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.  3 
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
  இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
  தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
  திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும்
  எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.  4 
பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்
  போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
  கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
  சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
  எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.  5 
பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார் 
  பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
  வணங்குகின்றார் அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்
  திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
  எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.  6 
அது பழச்சுவையென அமுதென அறிதற்கு
  அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
  எங்களை ஆண்டுகொண்டு இங் கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
  மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
  எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே.  7 
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
  மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின்னடியார்
  பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
  திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்
  ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே.  8 
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
  விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
  வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
  கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
  எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே.  9 
புவனியில் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
  போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
  திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
  படவும்நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
  ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே.  10 
  

திருச்சிற்றம்பலம்

Tuesday, July 21, 2020

19. திருத்தசாங்கம்

19. திருத்தசாங்கம்


கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)

 அடிமை கொண்ட முறைமை; நேரிசை வெண்பா.

திருச்சிற்றம்பலம்


ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன் சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன் செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல் எம்பெருமான் தேவர்பிரான் என்று.  1
ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்
நாதன் நமை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்கு
அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும்
தென்பாண்டி நாடே தெளி.  2 
தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்
மாதாடும் பாகத்தான் வாழ்பதியென் - கோதாட்டிப்
பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும்
உத்தர கோசமங்கை யூர்.  3 
செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர்
ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் - தையலாய்
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தங் காணுடையான் ஆறு.  4 
கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்
மஞ்சன் மருவும் மலைபகராய் - நெஞ்சத்து
இருளகல வாள்வீசி இன்பமரும் முத்தி
அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து.  5 
இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும்
தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப
வான்புரவி யூரும் மகிழ்ந்து.  6 
கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோன் 
மாற்றாரை வெல்லும் படைபகராய் - ஏற்றார்
அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங்
கழுக்கடைகாண் கைக்கொள் படை.  7 
இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன் 
முன்பால் முழங்கும் முரசியம்பாய் - அன்பாற்
பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும்
பருமிக்க நாதப் பறை.  8 
ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூறும் அன்பர்பால்
மேய பெருந்துறையான் மெய்த்தாரென் - தீயவினை
நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான்
தாளிஅறு காம் உவந்த தார்.  9 
சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்
கோலம் பொலியுங் கொடிகூறாய் - சாலவும்
ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும்
கோதிலா ஏறாம் கொடி.  10 
  

திருச்சிற்றம்பலம்

51. அச்சோப் பதிகம்

  51. அச்சோப் பதிகம் கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)  அனுபவவழி அறியாமை; கலிவிருத்தம். திருச்சிற்றம்பலம் முத்திநெறி அறியா...