Friday, July 24, 2020

22. கோயில் திருப்பதிகம்

22. கோயில் திருப்பதிகம்


கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)

அனுபோக இலக்கணம்; எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.


திருச்சிற்றம்பலம்

மாறிநின்றென்னை மயக்கிடும் வஞ்சப்
  புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி
  உள்ளவா காணவந்தருளாய்
தேறலின் தெளிவே சிவபெருமானே
  திருப்பெருந்துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த
  இன்பமே என்னுடை அன்பே.  1 
அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
  ஆனந்த மாய்க் கசிந்துருக
என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
  யானிதற் கிலனொர்கைம்மாறு
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப்
  பரந்த முத்தனே முடிவிலா முதலே
தென்பெருந்துறையாய் சிவபெருமானே
  சீருடைச் சிவபுரத்தரைசே.  2 
அரைசனே அன்பர்க் கடியனே னுடைய
  அப்பனே ஆவியோ டாக்கை
புரைபுரை கனியப் புகுந்துநின்றுருக்கிப்
  பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே
திரைபொரா மன்னும் அமுதத் தெண்கடலே
  திருப்பெருந்துறையுறை சிவனே
உரையுணர் விறந்துநின்றுணர்வதோர் உணர்வே
  யானுன்னை உரைக்குமா றுணர்த்தே.  3 
உணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார்
  உணர்வுக்குந் தெரிவரும் பொருளே
இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே
  எனைப் பிறப் பறுக்கும் எம்மருந்தே
திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே
  திருப்பெருந்துறையுறை சிவனே
குணங்கள் தாமில்லா இன்பமே உன்னைக்
  குறுகினேற் கினியென்ன குறையே.  4 
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
  ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே
மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென் 
  மனத்திடை மன்னிய மன்னே
சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப்பாயும்
  திருப்பெருந்துறையுறை சிவனே
இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய்
  இனியுன்னை யென்னிரக் கேனே.  5 
இரந்திரந் துருக என்மனத் துள்ளே
  எழுகின்ற சோதியே இமையோர்
சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய்
  திருப்பெருந்துறையுறை சிவனே
நிரந்தஆகாயம் நீர்நிலம் தீகால்
  ஆயவை அல்லையாய் ஆங்கே
கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
  கண்ணுறங் கண்டுகொண்டின்றே.  6 
இன்றெனக் கருளி இருள்கடிந்துள்ளத் 
  தெழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
  நீயலால் பிறிது மற்றின்மை
சென்றுசென்றணுவாய்த் தேய்ந்துதேய்ந்தொன்றாம்
  திருப்பெருந்துறையுறை சிவனே
ஒன்று நீயல்லை அன்றியொன் றில்லை
  யாருன்னை அறியகிற்பாரே.  7 
பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
  பரந்ததோர் படரொளிப் பரப்பே
நீருறு தீயே நினைவதேல் அரிய
  நின்மலா நின்னருள் வெள்ளச்
சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே
  திருப்பெருந்துறையுறை சிவனே
ஆருற வெனக்கிங் காரய லுள்ளார்
  ஆனந்தம் ஆக்குமென் சோதி.  8 
சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
  ஒருவனே சொல்லுதற் கரிய
ஆதியே நடுவே அந்தமே பந்தம்
  அறுக்கும் ஆனந்தமா கடலே
தீதிலா நன்மைத் திருவருட்குன்றே
  திருப்பெருந்துறையுறை சிவனே
யாதுநீ போவதோர் வகையெனக்கருளாய்
  வந்துநின் இணையடி தந்தே.  9 
தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச்
  சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
  யாதுநீ பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்
  திருப்பெருந்துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய்
  யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே.  10 

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

51. அச்சோப் பதிகம்

  51. அச்சோப் பதிகம் கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)  அனுபவவழி அறியாமை; கலிவிருத்தம். திருச்சிற்றம்பலம் முத்திநெறி அறியா...