5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது)
திருச்சிற்றம்பலம்
4. ஆத்தும சுத்தி
அறுசீர்ஆசிரியவிருத்தம்
ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற் கன்பிலை என்புருகிப் பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை துணையிலி பிணநெஞ்சே தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை செய்வதொன் றறியேனே. 1
அறிவி லாதஎ னைப்புகுந் தாண்டுகொண் டறிவதை யருளிமேல் நெறியெ லாம்புல மாக்கிய எந்தையைப் பந்தனை யறுப்பானைப் பிறிவி லாதஇன் னருள்கள்பெற் றிருந்துமா றாடுதி பிணநெஞ்சே கிறியெ லாம்மிகக் கீழ்ப்படுத் தாய்கெடுத் தாய்என்னைக் கெடுமாறே. 2
மாறி நின்றெனைக் கெடக்கிடந் தனையைஎம் மதியிலி மடநெஞ்சே தேறு கின்றிலம் இனியுனைச் சிக்கெனச் சிவனவன் திரள்தோள்மேல் நீறு நின்றது கண்டனை யாயினும் நெக்கிலை இக்காயம் கீறு கின்றிலை கெடுவதுன் பரிசிது கேட்கவுங் கில்லேனே. 3
கிற்ற வாமன மேகெடு வாய்உடை யான்அடி நாயேனை விற்றெ லாம்மிக ஆள்வதற் குரியவன் விரைமலர்த் திருப்பாத முற்றி லாஇளந் தளிர்பிரிந் திருந்துநீ உண்டன எல்லாம்முன் அற்ற வாறும்நின் னறிவும்நின் பெருமையும் அளவறுக் கில்லேனே. 4
அளவ றுப்பதற் கரியவன் இமையவர்க் கடியவர்க் கெளியான்நம் களவ றுத்துநின் றாண்டமை கருத்தினுட் கசிந்துணர்ந் திருந்தேயும் உளக றுத்துனை நினைந்துளம் பெருங்களன் செய்தது மிலைநெஞ்சே பளக றுத்துடை யான்கழல் பணிந்திலை பரகதி புகுவானே. 5
புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற் குகுவ தாவதும் எந்தையெம் பிரான்என்னை ஆண்டவன் கழற்கன்பு நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டி மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற் கென்செய்கேன் வினையேனே. 6
வினைஎன் போல்உடை யார்பிறர் ஆர்உடை யான்அடி நாயேனைத் தினையின் பாகமும் பிறிவது திருக்குறிப் பன்றுமற் றதனாலே முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்துநான் முட்டிலேன் தலைகீறேன் இனையன் பாவனை இரும்புகல் மனம்செவி இன்னதென் றறியேனே. 7
ஏனை யாவரும் எய்திட லுற்றுமற் றின்னதென் றறியாத தேனை ஆன்நெயைக் கரும்பின்இன் தேறலைச் சிவனைஎன் சிவலோகக் கோனை மான்அன நோக்கிதன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம் ஊனை யான்இருந் தோம்புகின் றேன்கெடு வேன்உயிர் ஓயாதே. 8
ஓய்வி லாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள்தந்து நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறிகாட்டித் தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன் தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே. 9
வேனில் வேள்கணை கிழித்திட மதிசுடும் அதுதனை நினையாதே மான்நி லாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித் தேன்நி லாவிய திருவருள் புரிந்தஎன் சிவன்நகர் புகப்போகேன் ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டினும் உண்டுடுத் திருந்தேனே. 10
No comments:
Post a Comment