Thursday, July 23, 2020

21. கோயில் மூத்த திருப்பதிகம்

21. கோயில் மூத்த திருப்பதிகம்


கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)

அநாதியாகிய சற்காரியம்; அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.


திருச்சிற்றம்பலம்

உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள் 
  நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப
  தானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும் அரு ளைப்புரி 
  யாய் பொன்னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து முடியும் 
  வண்ணம் முன்னின்றே.  1 
முன்னின் றாண்டாய் எனைமுன்னம் யானும் 
  அதுவே முயல்வுற்றுப்
பின்னின் றேவல் செய்கின்றேன் பிற்பட் 
  டொழிந்தேன் பெம்மானே
என்னின் றருளி வரநின்று போந்தி 
  டென்னா விடில் அடியார்
உன்னின் றிவனார் என்னாரோ பொன்னம் 
  பலக்கூத் துகந்தானே.  2 
உகந்தானே அன்புடை அடிமைக் குருகா
  வுள்ளத் துணர்விலியேன்
சகந்தான் அறிய முறையிட்டால் தக்க
  வாறன் றென்னாரோ
மகந்தான் செய்து வழிவந்தார் வாழ 
  வாழ்ந்தாய் அடியேற்குன்
முகந்தான் தாரா விடின்முடிவேன் பொன்னம் 
  பலத்தெம் முழுமுதலே.  3 
முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்
  கும் என்தனக்கும்
வழிமுதலேநின் பழவடி யார் 
  திரள்வான் குழுமிக்
கெழுமுத லேயருள் தந்தி ருக்கஇரங்
  குங்கொல்லோ என்று
அழுமதுவேயன் றிமற்றென் செய்கேன் 
  பொன்னம் பலத்தரைசே.  4 
அரைசே பொன்னம் பலத்தாடும் 
  அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்
  றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக் 
  காட்சி கொடுத்துன் அடியேன்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா 
  திருந்தால் ஏசாரோ.  5 
ஏசா நிற்பர் என்னைஉனக் கடியான்
  என்று பிறரெல்லாம்
பேசா நிற்பர் யான்தானும் பேணா 
  நிற்பேன் நின்னருளே
தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ 
  லக்கஞ் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய் 
  இனித்தான் இரங்காயே.  6 
இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென்று
  ஏமாந் திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய் 
  ஆள்வா ரிலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று 
  நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே 
  வாவென்று அருளாயே.  7 
அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல் 
  என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே 
  பொன்னம் பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்து
  வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே 
  போனாற் சிரியாரோ.  8 
சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு
  திரண்டுன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே
   றிருந்துன் திருநாமம்
தரிப்பார் பொன்னம் பலத்தாடும் தலைவா 
  என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி 
  இனித்தான் நல்காயே.  9 
நல்கா தொழியான் நமக்கென்றுன் நாமம் 
  பிதற்றி நயனநீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா 
  மனத்தால் நினைந்துருகிப்
பல்காலுன்னைப் பாவித்துப் பரவிப் 
  பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய் 
  என்னை உடையானே.  10 
  

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

51. அச்சோப் பதிகம்

  51. அச்சோப் பதிகம் கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)  அனுபவவழி அறியாமை; கலிவிருத்தம். திருச்சிற்றம்பலம் முத்திநெறி அறியா...