Sunday, July 5, 2020

போற்றித் திருவகவல் - 4

4. போற்றித் திருவகவல்

(இது தில்லையில் அருளிச் செய்யப்பட்டது)

சகத்தின் உற்பத்தி

நிலைமண்டில ஆசிரியப்பா

திருச்சிற்றம்பலம்

நான்முகன் முதலா வானவர் தொழுதொழ
ஈரடி யாலே மூவுல களந்து
நாற்றிசை முனிவரும் ஐம்புலன் மலரப்
போற்றிசெய் கதிர்முடித் திருநெடு மாலன்

5. றடிமுடி யறியும் ஆதர வதனிற்
கடுமுரண் ஏன மாகி முன்கலந்
தேழ்தல முருவ இடந்து பின்னெய்த்
தூழி முதல்வ சயசய வென்று
வழுத்தியுங் காணா மலரடி யிணைகள்

10. வழுத்துதற் கெளிதாய் வார்கட லுலகினில்
யானை முதலா எறும்பீ றாய
ஊனமில் யோனியி னுள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா வுதரத்
தீனமில் கிருமிச் செலவினிற் பிழைத்தும்

15. ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்

20. ஆறு திங்களில் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்

25. துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்
ஆண்டுகள் தோறும் அடைந்தஅக் காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகல் பசிநிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்

30. கருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயில்
ஒருங்கிய சாயல் நெருங்கிஉள் மதர்த்துக்
கச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்
தெய்த்திடை வருந்த எழுந்து புடைபரந்
தீர்க்கிடை போகா இளமுலை மாதர்தம்

35. கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும்
பித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுள்
மத்தக் களிறெனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி யென்னும் பல்கடல் பிழைத்தும்

40. நல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும்
புல்வரம் பாய பல்துறை பிழைத்தும்
தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி
முனிவி லாததோர் பொருளது கருதலும்
ஆறு கோடி மாயா சத்திகள்

45. வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின
ஆத்த மானார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்
சுற்ற மென்னும் தொல்பசுக் குழாங்கள்
பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்

50. விரத மேபர மாகவே தியரும்
சரத மாகவே சாத்திரம் காட்டினர்
சமய வாதிகள் தத்த மதங்களே
அமைவ தாக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாத மென்னும்

55. சண்ட மாருதம் சுழித்தடித் தாஅர்த்
துலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்

கலாபே தத்த கடுவிடம் எய்தி
அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும்
தப்பா மேதாம் பிடித்தது சலியாத்

60. தழலது கண்ட மெழுகது போலத்
தொழுதுள முருகி அழுதுடல் கம்பித்
தாடியும் அலறியும் பாடியும் பரவியுங்
கொடிறும் பேதையும் கொண்டது விடாதெனும்
படியே யாகிநல் லிடையறா அன்பிற்

65. பசுமரத் தாணி அறைந்தாற் போலக்
கசிவது பெருகிக் கடலென மறுகி
அகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச்
சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை

70. பூணது வாகக் கோணுதல் இன்றிச்
சதிரிழந் தறிமால் கொண்டு சாரும்
கதியது பரம அதிசய மாகக்
கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
மற்றோர் தெய்வங் கனவிலு நினையா

75. தருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபர னாகி அருளிய பெருமையைச்
சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப்
பிறிவினை யறியா நிழலது போல
முன்பின் னாகி முனியா தத்திசை

80. என்புநைந் துருகி நெக்குநெக் கேங்கி
அன்பெனும் ஆறு கரையது புரள
நன்புலன் ஒன்றி நாதஎன் றரற்றி
உரைதடு மாறி உரோமஞ் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித் திருதய மலரக்

85. கண்களி கூர நுண்துளி யரும்பச்
சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
தாயே யாகி வளர்த்தனை போற்றி
மெய்தரு வேதிய னாகி வினைகெடக்
கைதர வல்ல கடவுள் போற்றி

90. ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
தென்றில்லை மன்றினு ளாடி போற்றி
இன்றெனக் காரமு தானாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி

95. சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
மின்னா ருருவ விகிர்தா போற்றி
கன்னா ருரித்த கனியே போற்றி
காவாய் கனகக் குன்றே போற்றி
ஆவா வென்றனக் கருளாய் போற்றி

100. படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி
இடரைக் களையும் எந்தாய் போற்றி
ஈச போற்றி இறைவ போற்றி
தேசப் பளிங்கின் திரளே போற்றி
அரைசே போற்றி யமுதே போற்றி

105. விரைசேர் சரண விகிர்தா போற்றி
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதிசேர் செஞ்டை நம்பா போற்றி

110. உடையாய் போற்றி யுணர்வே போற்றி
கடையே னடிமை கண்டாய் போற்றி
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி

115. நெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க் கரிய மருந்தே போற்றி
ஏனோர்க் கெளிய இறைவா போற்றி
மூவேழ் சுற்ற முரணுறு நரகிடை
ஆழா மேயரு ளரசே போற்றி

120. தோழ போற்றி துணைவா போற்றி
வாழ்வே போற்றியென் வைப்பே போற்றி
முத்தா போற்றி முதல்வா போற்றி

அத்தா போற்றி யரனே போற்றி
உரையுணர் விறந்த வொருவ போற்றி

125. விரிகட லுலகின் விளைவே போற்றி
அருமையி லெளிய அழகே போற்றி
கருமுகி லாகிய கண்ணே போற்றி
மன்னிய திருவருள் மலையே போற்றி
என்னையு மொருவ னாக்கி இருங்கழல்

130. சென்னியில் வைத்த சேவக போற்றி
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவது மாவதுங் கடந்தாய் போற்றி
முழுவது மிறந்த முதல்வா போற்றி

135. மானேர் நோக்கி மணாளா போற்றி
வானகத் தமரர் தாயே போற்றி
பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

140. வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி
அளிபவ ருள்ளத் தமுதே போற்றி
கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி
நனவிலும் நாயேற் கருளினை போற்றி

145. இடைமரு துறையும் எந்தாய் போற்றி
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
ஆரூ ரமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவை யாறா போற்றி
அண்ணா மலையெம் அண்ணா போற்றி

150. கண்ணா ரமுதக் கடலே போற்றி
ஏகம் பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு வானாய் போற்றி
பாராயத்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

155. மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி
குற்றா லத்தெம் கூத்தா போற்றி
கோகழி மேவிய கோவே போற்றி
ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி
பாங்கார் பழனத் தழகா போற்றி

160. கடம்பூர் மேவிய விடங்கா போற்றி
அடைந்தவர்க் கருளும் அப்பா போற்றி
இத்தி தன்னின் கீழிரு மூவர்க்
கத்திக் கருளிய அரசே போற்றி
தென்னா டுடைய சிவனே போற்றி

165. எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி
ஏனக் குருளைக் கருளினை போற்றி
மானக் கயிலை மலையாய் போற்றி
அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள்கெட அருளும் இறைவா போற்றி

170. தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி
களங்கொளக் கருத அருளாய் போற்றி
அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி
நஞ்சே யமுதா நயந்தாய் போற்றி
அத்தா போற்றி ஐயா போற்றி

175. நித்தா போற்றி நிமலா போற்றி
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி

180. முறையோ தரியேன் முதல்வா போற்றி
உறவே போற்றி உயிரே போற்றி
சிறவே போற்றி சிவமே போற்றி
மஞ்சா போற்றி மணாளா போற்றி
பஞ்சே ரடியாள் பங்கா போற்றி

185. அலந்தே னாயே னடியேன் போற்றி
இலங்கு சுடரெம் மீசா போற்றி
கவைத்தலை மேவிய கண்ணே போற்றி
குவைப்பதி மலிந்த கோவே போற்றி
மலைநா டுடைய மன்னே போற்றி

190. கலையார் அரிகே சரியாய் போற்றி
திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி
பொருப்பமர் பூவணத் தரனே போற்றி
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி

195. துரியமு மிறந்த சுடரே போற்றி
தெரிவரி தாகிய தெளிவே போற்றி
தோளா முத்தச் சுடரே போற்றி
ஆளா னவர்கட் கன்பா போற்றி
ஆரா அமுதா அருளே போற்றி

200. போரா யிரமுடைப் பெம்மான் போற்றி
தாளி அறுகின் தாராய் போற்றி
நீளொள யாகிய நிருத்தா போற்றி
சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி
சிந்தனைக் கரிய சிவமே போற்றி

205. மந்திர மாமலை மேயாய் போற்றி
எந்தமை உய்யக் கொள்வாய் போற்றி
புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி
அலைகடன் மீமிசை நடந்தாய் போற்றி
கருங்குரு விக்கன் றருளினை போற்றி

210. இரும்புலன் புலர இசைந்தனை போற்றி
படியுறப் பயின்ற பாவக போற்றி
அடியொடு நடுவீ றானாய் போற்றி
நரகொடு சுவர்க்க நானிலம் புகாமற்
பரகதி பாண்டியற் கருளினை போற்றி

215. ஒழிவற நிறைந்த வொருவ போற்றி
செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி
கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி
பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்

220. குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி
புரம்பல எரித்த புராண போற்றி

பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றி போற்றி புராண காரண

225. போற்றி போற்றி சயசய போற்றி

திருச்சிற்றம்பலம்


No comments:

Post a Comment

51. அச்சோப் பதிகம்

  51. அச்சோப் பதிகம் கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)  அனுபவவழி அறியாமை; கலிவிருத்தம். திருச்சிற்றம்பலம் முத்திநெறி அறியா...