Friday, July 31, 2020

29. அருட்பத்து

 

29.  அருட்பத்து

திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) அருளிச்செய்யப்பட்டது.

மகாமாயா சுத்தி; எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்


சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய் பங்கயத் தயனுமா லறியா நீதியே செல்வத் திருப்பெருந்துறையில் நிறைமலர்க் குருந்தமே வியசீர் ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே.  1
நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்
  கண்ணனே விண்ணுளோர் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட்டலறி
  உலகெலாந் தேடியுங் காணேன்
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறையில்
  செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
  அதெந்துவே என்றரு ளாயே.  2 
எங்கள்நாயகனே என்னுயிர்த் தலைவா
  ஏலவார் குழலிமார் இருவர்
தங்கள் நாயகனே தக்கநற்காமன்
  தனதுடல் தழலெழ விழித்த
செங்கண்நாயகனே திருப்பெருந்துறையில்
  செழுமலர்க் குருந்தமே வியசீர்
அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால்
  அதெந்துவே என்றருளாயே.  3 
கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக்
  கண்ணனும் நண்ணுதற்கரிய
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன
  வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில்
  செழுமலர்க் குருந்தமே வியசீர்
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்
  அதெந்துவே என்றரு ளாயே.  4 
துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை
  துணைமுலைக் கண்கள்தோய் சுவடு
பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு
  பொங்கொளி தங்குமார் பினனே
செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந்துறையில்
  செழுமலர்க் குருந்தமே வியசீர்
அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால்
  அதெந்துவே என்றரு ளாயே.  5 
துப்பனே தூயாய் தூயவெண்ணீறு
  துதைந்தெழு துளங்கொளி வயிரத்
தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின்
  உறுசுவை அளிக்கும் ஆரமுதே
செப்பமா மறைசேர் திருப்பெருந்துறையில்
  செழுமலர்க் குருந்தமே வியசீர்
அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால்
  அதெந்துவே என்றரு ளாயே.  6 
மெய்யனே விகிர்தா மேருவே வில்லா
  மேவலர் புரங்கள் மூன்றெரித்த
கையனே காலாற் காலனைக் காய்ந்த
  கடுந்தழற் பிழம்பன்ன மேனிச்
செய்யனே செல்வத் திருப்பெருந்துறையில்
  செழுமலர்க் குருந்தமே வியசீர்
ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால்
  அதெந்துவே என்றரு ளாயே.  7 
முத்தனே முதல்வா முக்கணா முனிவா
  மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப்
பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப்
  பரகதி கொடுத்தருள் செய்யுஞ்
சித்தனே செல்வத் திருப்பெருந்துறையில்
  செழுமலர்க் குருந்தமே வியசீர்
அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால்
  அதெந்துவே என்றரு ளாயே.  8
மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி
  மறுமையோ டிம்மையுங் கெடுத்த
பொருளனே புனிதா பொங்குவா ளரவங்
  கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்
தெருளுநான் மறைசேர் திருப்பெருந்துறையில்
  செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்
  அதெந்துவே என்றரு ளாயே.  9 
திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையில்
  செழுமலர்க் குருந்தமே வியசீர்
இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்
  டென்னுடை யெம்பிரான் என்றென்
றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்
  அலைகடல் அதனுளே நின்று
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
  போதராய் என்றரு ளாயே.  10 

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

51. அச்சோப் பதிகம்

  51. அச்சோப் பதிகம் கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)  அனுபவவழி அறியாமை; கலிவிருத்தம். திருச்சிற்றம்பலம் முத்திநெறி அறியா...