Friday, July 31, 2020

30. திருக்கழுக்குன்றப் பதிகம்

30. திருக்கழுக்குன்றப் பதிகம்

திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) அருளிச்செய்யப்பட்டது.

குரு தரிசனம்; ஏழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்


பிணக்கிலாத பெருந்துறைப்பெரு மான் உன்நாமங்கள் பேசுவார்க் கிணக்கிலாததோர் இன்ப மேவருந் துன்ப மேதுடைத் தெம்பிரான் உணக்கிலாததோர் வித்துமேல்விளை யாமல் என்வினை ஒத்தபின் கணக்கி லாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.  1
பிட்டு நேர்பட மண் சுமந்த பெருந்துறைப்பெரும் பித்தனே
சட்டநேர்பட வந்திலாத சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்
சிட்டனே சிவலோகனேசிறு நாயினுங்கடையாய வெங்
கட்டனேனையும் ஆட்கொள்வான்வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.  2 
மலங்கினேன் கண்ணின்நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை
விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவதறிந்திலேன்
இலங்குகின்றநின்சேவடிகள் இரண்டும் வைப்பிடமின்றியே
கலங்கினேன் கலங்காமலேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.  3 
பூணொணாததொரன்பு பூண்டு பொருந்திநாள்தொறும் போற்ற வும்
நாணொணாததொர்நாணம் எய்தி நடுக்கடலுள் அழுந்திநான்
பேணொணாதபெருந்துறைப்பெருந் தோணிபற்றியுகைத்தலுங்
காணொணாத்திருக்கோலம் நீவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.  4 
கோலமேனிவராக மேகுணமாம் பெருந்துறைக்கொண்டலே
சீலமேதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி
ஞாலமேகரியாக நானுனை நச்சி நச்சிட வந்திடுங்
காலமேஉனை ஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.  5 
பேதம் இல்லதோர் கற்பளித்த பெருந்துறைப் பெருவெள்ளமே
ஏதமேபல பேசநீஎனை ஏதிலார் முனம் என்செய்தாய்
சாதல் சாதல்பொல் லாமையற்ற தனிச்சரண் சரணாமெனக்
காதலால் உனைஓதநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே.  6 
இயக்கி மாரறு பத்து நால்வரை எண்குணம்செய்த ஈசனே
மயக்க மாயதொர் மும்மலப்பழ வல்வினைக்குள் அழுந்தவும்
துயக்கறுத்தெனை ஆண்டுகொண்டு நின் தூய்மலர்க்கழல் தந்தெனைக்
கயக்க வைத்தடி யார்முனேவந்து காட்டினாய் கழுக்குன்றிலே.  7 
 

திருச்சிற்றம்பலம்

 

No comments:

Post a Comment

51. அச்சோப் பதிகம்

  51. அச்சோப் பதிகம் கோயில் (சிதம்பரம், தில்லையில் அருளிச்செய்யப்பட்டது)  அனுபவவழி அறியாமை; கலிவிருத்தம். திருச்சிற்றம்பலம் முத்திநெறி அறியா...